by Bella Dalima 16-02-2018 | 3:46 PM
Colombo (Newsfirst)
2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக விவசாய உற்பத்திகள் தடைப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் சற்று சீரடைந்து வருவதால், மாறா கொள்கை விகிதங்களைப் பேண நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நிலையான பொருளாதாரத்திற்கான திருப்திகரமான நிலை தென்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
வளர்ச்சி விகிதத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நிலையான வைப்பு விகிதத்தை (SDFR) 7.25 வீதமாகவும் நிலையான கடன் வசதி விகிதத்தை (SLFR) 8.75 வீதமாகவும் நாணய சபை பேணி வந்தது.
2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.3 வீதத்தால் வளர்ச்சி கண்டுள்ளது. அதே ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அந்த வளர்ச்சி 4 வீத வீழ்ச்சியைக் கண்டிருந்தது. 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி திட்டமிடப்பட்ட 5.5 வீதம் முதல் 6.0 வீதத்திலிருந்து 4.5 வீதத்திற்கு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது ''திறனைக் காட்டிலும் குறைந்த மட்டத்தில்'' இருப்பதாகவும் பொருளாதார நிலைப்புத்தன்மை வேகமாக அதிகரிக்கக்கூடும் எனவும் நாணய சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
கிடைத்துள்ள தரவுகளுக்கு அமைய, கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய சீரற்ற வானிலையால் தாக்கமடைந்த பொருளாதாரம் தற்போது சீராகி வருவதாகவும் எதிர்பார்க்கப்படும் வௌிநாட்டு நேரடி முதலீடுகளால் நன்மை கிட்டும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாண்டில் 5 முதல் 5.5 வீதம் வரையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் ஆளும் கட்சியின் அதிர்ச்சித் தோல்வியையடுத்து, அரசியல் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ளதால், நிலையான விகிதங்களைப் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஸ்திரமற்ற தன்மை முதலீடுகளிலும் வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தக்கூடும் என கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விடயங்கள் எவ்வாறு மாறும் என்பதை தற்போது கூறுவது எளிதில்லை எனவும் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.