அர்ஜுன் மகேந்திரன் இதுவரை நாட்டிற்கு திரும்பவில்லை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரை நாட்டிற்கு திரும்பவில்லை என தகவல்

by Staff Writer 16-02-2018 | 8:43 AM
COLOMBO (Newsfirst) - இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரையில் நாட்டிற்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் அளிப்பதற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை அறிக்கையை கோட்டை நீதவான நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அர்ஜுன் மகேந்திரனுக்கு சர்வதேச பொலிஸார் ஊடாக அழைப்பாணை விடுக்கப்பட்டதுடன் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குமூலமளிக்க ​வேண்டுமென கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். சிங்கப்பூரில் இருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் நேற்றைய தினத்துக்கு முன்னதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலமளிக்க வேண்டுமென கடந்த இரண்டாம் திகதி கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேன, அர்ஜுன் அலோசியஸ் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் பிணை முறிகள் மோசடி விவகாரத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டனர். இது தொடர்பான ஆதாரங்களை குற்றப்புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவானிடம் சமர்ப்பித்திருந்தது. அர்ஜுன் மகேந்திரன் இலங்கைக்கு வருகை தந்தால் அது குறித்து உடனடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்கள நிர்வாகிக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கடந்த 4 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.