வாக்குமூலம் வழங்குக:அர்ஜூன் மகேந்திரனுக்கு உத்தரவு

குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு உத்தரவு; அலோசியஸூக்கு விளக்கமறியல்

by Bella Dalima 16-02-2018 | 4:15 PM
Colombo (Newsfirst) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு வருகை தந்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது. இந்த அறிவித்தலை கடுகதி தபால் மற்றும் பொதிச்சேவை மூலம் அர்ஜுன் மகேந்திரனுக்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, மத்திய வங்கியின் முறிகள் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதேவேளை, இவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.