ஆரம்பம் முதலே சவால் விடுக்க நாம் முயற்சி செய்தோம்

ஆரம்பம் முதலே சவாலாக விளையாடியதாக தனுஷ்க குணதிலக்க தெரிவிப்பு

by Staff Writer 16-02-2018 | 10:01 AM
COLOMBO (Newsfirst) - பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், ஆரம்பம் முதலே சவாலாக விளையாடியதாக துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. இது சர்வதேச இருபதுக்கு20 அரங்கில் பங்களாதேஷ் பதிவு செய்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். பதிலளித்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மென்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஜோடி அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தது. இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களை அதிரடியாக பகிர்ந்தனர். சர்வதேச இருபதுக்கு20 அரங்கில் கன்னி அரைச்சதத்தை எட்டிய குசல் மென்டிஸ் 27 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாசினார். மத்தியவரிசையில் தசுன் சானக்க ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சர்வதேச இருபதுக்கு20 போட்டியொன்றில் இலங்கை அணி பதிலளித்தாடி கடந்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதேவேளை இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஆறாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. செஞ்சூரியனில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப்போட்டி இன்று மாலை 04 முப்பதுக்கு ஆரம்பமாகவுள்ளது. 06 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 01 போட்டி எஞ்சிய நிலையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.