தென்னாப்பிரிக்க அதிபரானார் சிரில் ரமபோசா

தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா தெரிவு

by Bella Dalima 15-02-2018 | 7:38 PM
தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஷூமா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் புதிய அதிபராக துணை அதிபர் சிரில் ரமபோசா தெரிவாகியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா (75) கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வாக்கெடுப்பில் அவர் தோல்வியடையும் நிலை உருவாகியது. ஆகவே, அவர் வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் ANC கட்சி வலியுறுத்தியது. முதலில் மறுத்த ஷூமா பின்னர் வேறு வழியின்றி பதவி விலகினார். இந்நிலையில், புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் இன்று நடந்தது. துணை அதிபரான சிரில் ரமபோசா அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால், அவர் அதிபராக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.