தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை

by Bella Dalima 14-02-2018 | 4:43 PM
தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒரு நாள் தொடரை வென்று, இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் ​போட்டியில் இந்தியா 73 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன் பிரகாரம், இந்திய அணி தொடரை 4 -1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. Port Elizabeth இல் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, 42.2 ஓவர்களில் 201 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. போட்டியில் 115 ஓட்டங்களைப் பெற்று சதம் கடந்த ரோஹித் ஷர்மா, ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். அணித்தலைவர் விராட் கோஹ்லி 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் 34 ஓட்டங்களுடன் வௌியேறினார். ரஹானே 8 ஓட்டங்களுடனும் ஹர்திக் பாண்டியா ஓட்டம் இன்றியும் ஆட்டமிழந்தனர். அதேபோன்று, தென்னாப்பிரிக்க அணியில் அம்லா 71 ஓட்டங்களுடனும் லாசென் 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, ஷம்சி ஒட்டம் எதனையும் பெறாது பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் குல்திப் யாதவ் 4 விக்கெட்களையும் ஷஹல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஜே ஜே பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.