கிராண்ட்பாஸில் கட்டிடம் இடிந்து வீழ்ந்தது

கிராண்ட்பாஸில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் எழுவர் பலி 

by Bella Dalima 14-02-2018 | 4:06 PM
Colombo (Newsfirst) கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் எழுவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். பாபாபுள்ளே பிளேஸில் உள்ள கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது. தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான இந்த பழமையான கட்டிடத் தொகுதி களஞ்சியசாலையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொகுதியின் இரண்டு கட்டிடங்களே இடிந்து வீழ்ந்துள்ளன. காயமடைந்துள்ள இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். இதேவேளை, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினருடன் 8 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்தது.