தமிழரின் பெருமை பேசும் படத்தில் அக்‌ஷய் குமார்

தமிழரின் பெருமை பேசும் படத்தில் அக்‌ஷய் குமார்

by Bella Dalima 10-02-2018 | 4:58 PM
அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்திப் படம் ‘பேட் மேன்’. பால்கி இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் நேற்று (09) திரைக்கு வந்தது. இதுவொரு தமிழரின் பெருமை பேசும் படம். பெண்களுக்காக குறைந்த விலையில் ‘நாப்கின்’ தயாரித்து பத்மஸ்ரீ விருது பெற்றவர் அருணாசலம் முருகானந்தம். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவருடைய வாழ்க்கை ‘பேட்மேன்’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. இதில் அருணாசலம் முருகானந்தம் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார். முக்கிய தோற்றத்தில் ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடித்திருக்கிறார்கள். பெண்களுக்காக குறைந்த விலையில் ‘நாப்கின்’ தயாரிப்பதற்கு அவர் எந்தவிதமான சிரமங்களையும் அவமானங்களையும் கடக்க நேர்ந்தது என்பதைச் சொல்லும் படமாக பேட் மேன் உருவாகியிருக்கிறது. இலாப நோக்கம் இல்லாமல் மகளிர் அமைப்புகள், பள்ளிகள், பொது நல அமைப்புகளுக்கு இயந்திரம் மூலம் ‘நாப்கின்’ தயாரிக்கும் பயிற்சியை அருணாசலம் முருகானந்தம் வழங்கி வருகிறார். சக்திவாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக இவரை 2014 ஆம் ஆண்டு ‘டைம்’ பத்திரிகை தேர்ந்தெடுத்திருந்தது. இந்திய மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.