by Bella Dalima 10-02-2018 | 4:14 PM
Colombo (Newsfirst)
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்தது.
இம்முறை வாக்களிப்பில் கலந்துகொள்ள 15.8 மில்லியன் பேர் தகுதி பெற்றிருந்தனர்.
நாடெங்கிலும் 65 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்தது.
இன்றைய தேர்தலின் மூலம் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இடைக்கால தடையுத்தரவு காரணமாக எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று நடைபெறவில்லை.
எவ்வாறாயினும், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 275 பிரதேச சபைகளுக்கான பிரதிநிதிகள் தேர்தலூடாகத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நாடெங்கிலும் 13, 374 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.
11,300 உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் சில சர்வதேச கண்காணிப்பாளர்களும் நாடளாவிய ரீதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புகள் மிக அமைதியான முறையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 8 வேட்பாளர்கள் அடங்கலாக 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை வாக்குப்பதிவு மிகக்குறைவாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும், வாக்களிப்பின் நிறைவில் 65 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்தது.
அதன்படி,
மாத்தளையில் 80 வீத வாக்குப்பதிவும்
கம்பஹாவில் 75 வீத வாக்குப்பதிவும்
பொலன்னறுவையில் 75 வீத வாக்குப்பதிவும்
காலியில் 75 வீத வாக்குப்பதிவும்
மாத்தறையில் 72 வீத வாக்குப்பதிவும்
ஹம்பாந்தோட்டையில் 70 வீத வாக்குப்பதிவும்
மொனராகலையில் 75 வீத வாக்குப்பதிவும்
புத்தளத்தில் 65 வீத வாக்குப்பதிவும்
கேகாலையில் 70 வீத வாக்குப்பதிவும்
மன்னாரில் 77 வீத வாக்குப்பதிவும்
கிளிநொச்சியில் 76 வீத வாக்குப்பதிவும்
யாழ்ப்பாணத்தில் 62 வீத வாக்குப்பதிவும்
வவுனியாவில் 70 வீத வாக்குப்பதிவும்
முல்லைத்தீவில் 78 வீத வாக்குப்பதிவும்
திருகோணமலையில் 85 வீத வாக்குப்பதிவும்
மட்டக்களப்பில் 76 வீத வாக்குப்பதிவும்
அம்பாறையில் 68 வீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.
இன்றிரவு முதல் வௌியாகவுள்ள தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள்