உதயங்க வீரதுங்கவை ஏன் கைது செய்ய முடியவில்லை? 

உதயங்க வீரதுங்கவை ஏன் கைது செய்ய முடியவில்லை: வௌிவிவகார, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுக்கள் தௌிவூட்டல்

by Bella Dalima 09-02-2018 | 9:58 PM
கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்) ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய முடியாமற்போனமைக்கான காரணம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவப்பட்டது. உதயங்க தொடர்பில் தற்போது எதனையும் கூற முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர பதிலளித்தார். மேலும், இராஜதந்திர நடவடிக்கைகளில் அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளதாக ருவன் குணசேகர குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கு செல்ல முயன்றபோது கடந்த 4 ஆம் திகதி உதயங்க வீரதுங்க துபாய் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். எவ்வாறாயினும், சர்வதேச பொலிஸார் தம்மைத் தடுத்து விசாரித்ததாகவும் சர்வதேச குற்றச்சாட்டோ அல்லது சிவப்பு எச்சரிக்கையோ இன்மையால் தாம் விடுதலை செய்யப்பட்டதாகவும் உதயங்க வீரதுங்க நேற்று (08) தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே, உதயங்க வீரதுங்க தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில், வௌிவிவகார, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுக்கள் இன்று பிற்பகல் கூட்டு அறிக்கையொன்றை விடுத்துள்ளன. மிக் விமான கொடுக்கல் வாங்கலின்போது 7.833 மில்லியன் டொலர்களை முறையற்ற விதத்தில் கையாண்டமை மற்றும் நிதி தூய்தாக்கல் ஆகியன தொடர்பில் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பித்ததாக கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிடியாணைக்கமைய, சர்வதேச பொலிஸாருக்கு நீல அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணைக்குழுக்கள் சில நாடுகளுடன் இணைந்து உதயங்க வீரதுங்கவை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபரொருவரைத் தடுத்து வைக்க முடியாததால், ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை விடுவித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சும் சட்டம் ஒழுங்கும் அமைச்சும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வௌியேறுவது தடுக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு பொலிஸார் பிரத்தியேக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.