by Bella Dalima 09-02-2018 | 10:22 PM
கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் சில காரணங்களைக் கூறி கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
தேர்தல் பணிகளில் வாகனங்களை ஈடுபடுத்துவதில் இருந்தும் அவர்கள் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டது.
எவ்வாறாயினும், தேர்தல் பணிகள் முறையாக நடைபெற தேர்தல் ஆணைக்குழுவின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டியது அனைத்து அரச அதிகாரிகளின் கடமையாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டளைகளை மீறும் பட்சத்தில் மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன் அபராதத்தொகையும் விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.