மாலைத்தீவில் மோசமடையும் அரசியல் நிலைமை

மாலைத்தீவில் மோசமடையும் அரசியல் நிலைமை: இந்தியாவின் தலையீடு அவசியமில்லை என்கிறது சீனா

by Bella Dalima 08-02-2018 | 8:54 PM
மாலைத்தீவின் அரசியல் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம், பிரதம நீதியரசர் அப்துல்லாஹ் ஸைட் மற்றும் நீதிபதி அலி ஹம்ட் ஆகிய மூவர் மீதும் அரச விரோத சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மாலைத்தீவின் பிரதம நீதியரசரின் சேவையை இரத்து செய்வதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக மாலைத்தீவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மாலைத்தீவின் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் சபாநாயகரை சந்திக்க வாய்ப்பளிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா முன்வைத்த கோரிக்கையை மாலைத்தீவு அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகத்தின் ட்விட்டர் செய்தித்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டப்பூர்வமாக ஆட்சிப்பீடம் ஏறியுள்ள மாலைத்தீவு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு பதில் பொலிஸ் ஆணையாளர் அப்துல் நவாஸ் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அந்நாட்டு பிரதம நீதியரசர் அப்துல்லா ஷஹீட் கைது செய்யப்பட்டமை மற்றும் மாலைத்தீவின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கவலை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பையும் சட்டத்தையும் பாதுகாக்குமாறு மாலைத்தீவு அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவசர கால நிலைமையை விரைவில் தளர்த்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, மாலைத்தீவின் ஜனநாயகத்தின் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா பாதுகாப்புப் பேரவையும் மாலைத்தீவின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், நாடடின் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து வைக்க வேண்டுமென இந்தியா பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது. எவ்வாறாயினும், இது மாலைத்தீவின் உள்விவகாரப் பிரச்சினை என்பதால் வௌி நபர்களின் தலையீடு அவசியமில்லை என சீனா தெரிவித்துள்ளது.