வௌிநாட்டில் வேலை செய்வோர் தொடர்பில் கணக்காய்வு 

வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலணி தொடர்பில் விசேட கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்

by Bella Dalima 07-02-2018 | 5:48 PM
கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்) வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலணி தொடர்பில் விசேட கணக்காய்வு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்தது. அதற்கமைய, வௌிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துதல் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்தார். துபாய், அபுதாபி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு கணக்காய்வு அதிகாரிகளை அனுப்பவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார். குறித்த கணக்காய்வு அதிகாரிகள் வௌிநாட்டில் வேலை செய்யும் இலங்கை தொழிலாளர்களிடம் பல்வேறு விடயங்கள் குறித்து தகவல்களைப் பெறவுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் மேலும் கூறினார். அதேவேளை, குறித்த நாடுகளின் தூதுவராலயங்கள் மற்றும் முகவர் நிலையங்களிடமிருந்தும் தகவல்கள் திரட்டப்படவுள்ளன. பெறப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க சுட்டிக்காட்டினார்.