இருபதுக்கு 20: அஞ்சலோ மெத்யூஸ் விளையாடமாட்டார்

பங்களாதேஷூடனான சர்வதேச இருபதுக்கு 20 தொடரிலும் அஞ்சலோ மெத்யூஸ் விளையாடமாட்டார்

by Bella Dalima 06-02-2018 | 9:29 PM
கொழும்பு (நியூஸ்பெஸ்ட்) பங்களாதேஷூடனான சர்வதேச இருபதுக்கு 20 தொடரிலும் அஞ்சலோ மெத்யூஸ் விளையாடமாட்டார் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரான அஞ்சலோ மெத்யூஸ், பங்களாதேஷூடனான சர்வதேச இருபதுக்கு 20 தொடரிலும் விளையாடமாட்டாரென அறிவிக்கப்பட்டுள்ளது. மெத்யூஸ் உபாதையிலிருந்து இன்னும் பூரண குணமடையவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிம்பாப்வே, பங்களாதேஷ், இலங்கை அணிகள் விளையாடிய முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உபாதைக்குள்ளான அஞ்சலோ மெத்யூஸ் அந்தத் தொடரை முழுவதுமாக இழந்தார். மெத்யூஸூக்கு பூரண ஓய்வு தேவை என்பதால் பங்களாதேஷூக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், மெத்யூஸ் பூரண குணமடையாததால் பங்களாதேஷூக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரிலும் அவருக்கு ஓய்வளித்துள்ளதாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சுதந்திரக் கிண்ணத்திற்கான தொடரில் அஞ்சலோ மெத்யூஸ் இடம்பெறுவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 போட்டிகள் கொண்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.