ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நாளை விவாதம்

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் விவாதம்

by Staff Writer 05-02-2018 | 2:58 PM
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நாளை காலை 10.30 தொடக்கம் மாலை 4 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறிகள் மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி என்பன தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் அறிக்கைகள் தொடர்பிலேயே நாளை விவாதிக்கப்படவுள்ளது. விவாதத்தை நடத்துவதற்கான நேரம் தொடர்பில் தீர்மானிப்பதற்கு சபாநாயகர் கரு ஜசூரிய தலைமையில் இன்று முற்பகல் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இந்த விவாதத்தை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. நாளைய தினத்திற்குள் குறித்த அறிக்கைகள் தொடர்பான விவாதத்தை நிறைவு செய்ய முடியாது எனவும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளிலும் இந்த விவாதம் நடத்தப்படக் கூடும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.