by Staff Writer 28-12-2014 | 1:15 PM
கடும் மழைக் காரணமாக மாவிலாறு நீர்த்தேக்கத்தை அண்மித்த மகாவலி கங்ககையின் இருமறுங்கிலும் அமைக்கப்பட்டுள்ள வெள்ள பாதுகாப்பு சுவர்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பத்திரா கமலதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வேண்டும் என அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
வெள்ள பாதுகாப்பு சுவர்களுக்கு மேலாக தற்போது நீர் வெளியேறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் ஒரு அடிக்கு மேல் நீர் நிரம்பும் பட்சத்தில் மகாவலி கங்கை பெருக்கெடுக்கலாம் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேசத்தில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக நீர் மட்டம் அதிகரிப்பதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூதூரின் சோமாபுர பகுதியே மகாவலி கங்கை பெருக்கெடுத்தால் அதிகம் பாதிக்கப்படும் என தெரிவித்த பத்திரா கமலதாஸ, குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.