இலங்கையில் வலுவடையும் எல்நினோ

இலங்கையில் எல்நினோ மேலும் வலுவடையும் சாத்தியம்

by Staff Writer 12-09-2026 | 8:01 AM

Colombo (News 1st) நிலவும் எல்நினோ நிலைமை மேலும் வலுவடையும் சாத்தியக்கூறு 98 வீதம் வரை உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மாதங்களில் எல்நினோ நிலைமை வலுவடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். 1950 ஆம் ஆண்டு முதல் இதுவரை பதிவாகியுள்ள 28 எல்நினோ நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஏற்படவுள்ள எல்நினோ நிலைமை அவை அனைத்தையும் விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டெம்பர் மாத இறுதியிலிருந்து மழைவீழ்ச்சி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். மிகவும் வலுவான எல்நினோ நிலைமையால் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைவடையும் அதேநேரம் நீர் பற்றாக்குறையும் ஏற்படலாமென வளிமண்டலவியல் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன  எச்சரித்துள்ளார்.