குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கிய அரசாங்கம்

குற்றவாளிகளின் 6000 மில்லியன் ரூபா சொத்துக்களை முடக்கிய அரசாங்கம்

by Staff Writer 29-08-2026 | 1:28 PM

Colombo (News 1st) தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 6,000 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
113 விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அவற்றுள், 5,423 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் 102 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சொந்தமானவை என பொலிஸார் தெரிவித்தனர். 
முடக்கப்பட்ட சொத்துக்களில் 3 திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சொந்தமான 209 மில்லியன் ரூபா சொத்துக்களும் உள்ளடங்குகின்றன. 
பிரமிட் மோசடிகள், சிறுவர் துஷ்பிரயோகம், வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களுக்கு சொந்தமான 367 மில்லியன் ரூபா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில்,
1,437 மில்லியன் ரூபா பெறுமதியான 55 வீடுகள்,
1,322 மில்லியன் ரூபா பெறுமதியான 138 ஏக்கர் காணிகள்,
1,171 மில்லியன் ரூபா பெறுமதியான 142 வாகனங்கள்,
428 மில்லியன் ரூபா பெறுமதியான 27 வங்கிக் கணக்குகள்,
168 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம்,
214 மில்லியன் ரூபா பெறுமதியான 21 வர்த்தக நிலையங்கள்,
250 மில்லியன் ரூபா பெறுமதியான 8 கட்டிடங்கள்,
305 மில்லியன் ரூபா பெறுமதியான 12  நீண்டநாள் படகுகள்,
239 மில்லியன் ரூபா பெறுமதியான பல்வேறு வகையான சொத்துக்கள் மற்றும் 461 மில்லியன் ரூபா பணமும் உள்ளடங்குகின்றன. 
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன்
அவர்களில் 38 பேர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் ஏனைய குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களாவர்.
சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த  திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் 28 பேரும் குறித்த காலப்பகுதியில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.