.webp)
-558033.jpg)
Colombo (News 1st) அரசாங்கத்தை நடத்துவதற்காக அதிகளவு நிதியை ஒதுக்குவது மக்கள் தரப்பில் எந்தவகையிலும் நியாயமானது இல்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அதற்கமைய 9 வீத மட்டத்தில் உள்ள செலவினங்களைக் குறைத்து 4 வீதமாகவுள்ள மூலதன செலவீனங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு எதிர்வரும் வருடத்திற்கான பொருளாதாரத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
2027ஆம் ஆண்டில் மூலதன செலவினங்களுக்காக 2 ட்ரில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் இது சுமார் 40 வீத அதிகரிப்பு எனவும்ஜனாதிபதி தெரிவித்தார்.
2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் காலி மாவட்ட அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட காலி மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 நிதியாண்டுக்கான நிதித் தேவைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
திறைசேரிக்கு பெறப்படும் ஒவ்வொரு ரூபாவையும் நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என இதன்போது வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினர் கடன் செலுத்த வேண்டிய அவசியமற்ற நிதி ஒழுக்கம் மிக்க நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கூறினார்.
சர்வதேச அறிக்கைகளில் தற்போது இலங்கை பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் மதிப்பீடுகள் சிறப்பான மட்டத்தில் காணப்படுவதாகவும் கடனை செலுத்த முடியாத, ஊழல் மற்றும் சமூக குற்றங்கள் நிறைந்த நாடாக சர்வதேச ரீதியில் பேசப்பட்ட எமது நாடு, இன்று சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட மற்றும் ஊழல் குறைந்த நாடாக சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
