.webp)

Colombo (News1st) வனவாசல பகுதியில் ரயில் தடம்புரண்டமைக்கு காரணமான ரயில் தண்டவாளத்தின் லொக் பார் மற்றும் பிளேட்களைக் கழற்றியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தண்டவாளத்தின் பாகங்களைக் கழற்றி விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதியமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெலயிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த ரயிலொன்றே இன்று அதிகாலை இவ்வாறு தடம்புரண்டது.
ரயில் தடம்புரண்டதையடுத்து ரயில் பெட்டியொன்றும் கவிழ்ந்துள்ளது.
இதன்போது காயமடைந்த பயணிகள் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
