.webp)

Colombo (News 1st) பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின்(ADB) விசேட அழைப்பின் பேரில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் அங்கு சென்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தை (NAIA) சென்றடைந்த பிரதமரை பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி சானக்க தல்பஹேவா, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் முக்கிய அங்கமாக மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதமர் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன், இந்த விஜயத்தின் இடையே பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.
இதன்போது இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நலன்சார் விடயங்கள் குறித்தும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
