தேசிய அனர்த்த இடப்பரப்பை அறிவித்து வர்த்தமானி

பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்கள் தேசிய அனர்த்த இடப்பரப்பாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி

by Staff Writer 03-12-2025 | 3:53 PM

Colombo (News 1st) நிலவும் பலத்த மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய அனர்த்த இடப்பரப்பாகப் பிரகடனப்படுத்தி அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இறப்புகளின் பதிவு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் 11ஆம் பகுதியின் 9ஆம் பிரிவிற்கமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

'டித்வா' சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்கள் தேசிய அனர்த்த இடப்பரப்பாக பெயரிடப்பட்டுள்ளன.

கண்டி, நுவரெலியா, பதுளை, குருணாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் களுத்துறை ஆகிய 22 நிர்வாக மாவட்டங்கள் தேசிய அனர்த்த இடப்பரப்பாகப் பெயரிடப்பட்டுள்ளன.