.webp)
Colombo (News 1st) பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து வௌியிடப்பட்ட வர்த்தமானியில் இந்த விடயம் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தேசிய நீர்வரைவியல் சபை, இலங்கை தேசிய நீர்வரைவியல் அலுவலகம் ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழிருந்த புனர்வாழ்வு அலுவலகம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சூதாட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்திற்கு அமைய அமைக்கப்படவுள்ள புதிய அதிகாரசபை நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்சார சபையை மறுசீரமைப்பதன் மூலம் நிறுவப்பட்ட 4 புதிய நிறுவனங்கள் வலுசக்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
Online பாதுகாப்பு தொடர்பான ஆணைக்குழு அதனுடன் தொடர்புடைய சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரங்கள் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஜனாதிபதியின் கீழ் இயங்குகின்றது.
இதுவரை நிதி அமைச்சின் கீழிருந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் அதன் பிற நிறுவனங்கள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.