தீபங்களின் திருநாளான தீபாவளி இன்று

தீபங்களின் திருநாளான தீபாவளி இன்று

by Staff Writer 20-10-2025 | 12:44 PM

Colombo (News 1st) 
உலக வாழ் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை இன்று(20) கொண்டாடுகின்றனர்.

தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தி அன்று கொண்டாப்படுகின்றது.

காத்தற் கடவுளான மஹாவிஷ்ணு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் அவதார புருஷராக பூமியில் ஜனித்ததாக வரலாறு கூறுகின்றது.

துவாபரயுகத்தில் கொடுங்கோலோச்சிய கம்சன், நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்வதற்காக பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆயர் குடியில் கிருஷ்ணணாய் அவதரித்தார்.

பாண்டவர்களின் தோழராய் பார்த்திபனின் சாரதியாய் குருசேத்திரத்தில் மகாபாரதப் போரை வழிநடத்திய கண்ணபிரான் அன்று தர்மத்தை நிலைநாட்டினார்.

வரங்கள் பல பெற்று மக்களை துன்புறுத்திய நரகாசுரனையும் கிருஷ்ண பரமாத்மா சம்ஹாரம் செய்து மக்களுக்கு வாழ்வளித்தார்.

நரகாசுரனுக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் கைகூடியதை நினைவுகூரும் நோக்கில் தீபத்திருநாளன்று இல்லங்களும் கோவில்களும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

உள்ளொளி ஏற்பட்டு நான் எனும் உணர்வை கடப்பதன் மூலமாகவே ஆயிரங் கோடி ஜோதி சொரூபமான பரப்பிரம்மத்தை அடைய முடியும் என்ற தத்துவத்தையும் அகல் விளக்கு வழிபாடு உணர்த்துகின்றது.