.webp)
Colombo (News 1st) கொழும்பு மத்திய தபால் பரிமாற்றக ஊழியர்களின் வருகை மற்றும் வௌியேறல் பதிவுகளை கைவிரல் அடையாள இயந்திரத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் கைவிரல் அடையாளப்பதிவு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
குறித்த இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே எதிர்கால மேலதிகநேரக் கொடுப்பனவுகள் கணக்கிடப்படவுள்ளன.
அனைத்து நிர்வாகப் பிரிவுகளிலும் கைவிரல் அடையாள இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக தபால் திணைக்களத்தின் அனைத்து மாகாண அலுவலகங்கள் மற்றும் தபால் அலுவலகங்களிலும் கைவிரல் அடையாள இயந்திரங்களை நிறுவ விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த பரிந்துரைகளின் அடிப்படையில் கைவிரல் அடையாள இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தபால் தலைமையகத்தில் கைவிரல் அடையாள இயந்திரங்களை உள்ளிட்ட எதிர்ப்பு உட்பட பல்வேறு விடயங்களை முன்வைத்து பல தபால் தொழிற்சங்கங்கள் அண்மையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.