.webp)
Colombo (News1st) தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெக்கி தலைமையில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் வருடாந்த மாநாடு..
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் வருடாந்த மாநாடு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்று(27) பிற்பகல் இடம்பெறவுள்ளது.
தென்னாபிரிக்காவின் 2ஆவது ஜனநாயக ஜனாதிபதியும் ஆபிரிக்காவின் புகழ்மிகு அரசியல் தலைவர்களில் ஒருவருமான தாபோ ம்பெக்கி இந்த மாநாட்டில் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.
உலக அரசியலின் வாழும் ஆளுமையாகத் திகழும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெக்கி நேற்று(26) முற்பகல் நாட்டிற்கு வருகை தந்தார்.
தாபோ ம்பெக்கியை மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூஸூப், இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சென்டில் எட்வின் ஷால்க் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் வருடாந்த மாநாட்டில் தாபோ ம்பெக்கி சிறப்புரையாற்றவுள்ளார்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கொழும்பில் இளம் தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
வார இறுதியில் நடைபெறவுள்ள கம்மெத்த செயற்றிட்டத்திலும் தாபோ ம்பெக்கி கலந்துகொள்ளவுள்ளார்.