நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மகள் விளக்கமறியலில்..

by Staff Writer 18-06-2025 | 7:34 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) முற்பகல் கைது செய்யப்பட்டனர்.

இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மூவருக்கும் பிணை வழங்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத்தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷனி ஏபா வீஹேன மற்றும் மகள் சந்துலா ரமலீ ரம்புக்வெல்ல ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயசிங்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

தலா 50,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 5 மில்லியன் ரூபா பெறுமதியான 3 சரீரப்பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிப்பதற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேகநபர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

எனினும் பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்யத் தவறியதால் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

97.35 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக ஈட்டியமை தொடர்பாக நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைவாக மூவரும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மன்றில் தெரிவித்தது.

சந்தேகநபர்களின் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதிப்புலனாய்வு பிரிவின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சரின் மனைவி மற்றும் மூன்றாம் சந்தேகநபரான அவரது மகள் ஆகியோருக்கு உரித்தான தலா 300 இலட்சம் ரூபா பெறுமதியான 2 நிலையான வைப்பு வங்கி கணக்குகள் தொடர்பில் விடயங்கள் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் குறித்த சந்தேகநபர்களுக்கு உரித்தான ஆயுள் காப்புறுதி பத்திரங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், சந்கேநபர்களுக்கு சொந்தமான 150 இலட்சம் ரூபா பெறுமதியான 3 வங்கிக் கணக்குகள், வேறு நபர்களின் பெயரில் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த விசாரணைகளுக்கமைவாக முன்னாள் அமைச்சரின் மகள் அமாலி ரம்புக்வெல்லவுக்கு உரித்தான கூட்டு ஆதனமும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் கணவருக்கு சொந்தமான காரையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொறுப்பேற்றுள்ளதாக அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.

இந்த விசாரணைகளினூடாக கண்டறியப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த, இந்த விசாரணைகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சந்தேகநபர்களால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வருமானம் ஈட்டப்பட்ட விதம் தொடர்பில் சந்தேகநபர்கள் ஆவணங்களுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு விளக்கமளித்துள்ள போதிலும் அவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கோருவது நியாயமற்றது என சட்டத்தரணி இங்கு குறிப்பிட்டார்.

வழக்கு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.