27 வருடங்களின் பின்னர் கிடைத்த கிண்ணம்

துரதிர்ஷ்ட வரலாற்றை துடைத்தெறிந்த தென்னாபிரிக்கா

by Rajalingam Thrisanno 14-06-2025 | 7:31 PM

Colombo (News 1st) டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணி சுவீகரித்தது.

இதற்கான இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகளால் தென்னாபிரிக்கா வெற்றிகொண்டது.

கிரிக்கெட்டின் தாயகம் என போற்றப்படும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் நாளிலேயே 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பெஹூ வெப்ஸ்டர் 72 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 66 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலளித்தாடிய தென்னாபிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் இரண்டாம் நாளில் 138 ஓட்டங்களுடன் முடிவுக்குவந்தது.

டேவிட் பெடின்கஹம் பெற்ற 45 ஓட்டங்களே அணி தரப்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் 28 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

74 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆம் நாளில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா மீண்டும் தடுமாற்றத்திற்குள்ளானது.

மிச்செல் ஸ்டார்க் 58 ஓட்டங்களையும் அலெக்ஸ் கிரே 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க  3ஆம் நாளில் அவுஸ்திரேலியா 207 ஓட்டங்களைப் பெற்றது.

கெகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தென்னாபிரிக்க அணியின் வெற்றி இலக்கு 282 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன் அதற்காக 2 நாட்களுக்கு மேல் காலஅவகாசமும் இருந்தது.

எனினும், தென்னாபிரிக்கா அந்த இலக்கை அடைந்துவிடுமா எனும் சந்தேகமே இரசிகர்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்பட்டது.

லோர்ட்ஸ் மைதானத்தில் 282 ஓட்டங்களை அடைவது மிகவும் கடினமென கருதப்பட்டதும் தென்னாபிரிக்காவின் கடந்த கால தோல்வி வரலாறுமே அதற்குக் காரணமாகும்.

அந்த சந்தேகத்திற்கு ஏற்றாற் போலவே 2ஆவது ஓவரின் முதல் பந்தில் முதல் விக்கெட்டை தென்னாபிரிக்கா இழந்தது.

ஆனாலும், அணியின் 27 வருட கால கனவை தோளில் சுமந்துகொண்டு பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிய எய்டன் மக்ரம் மிகஅபாரமாக சதமடித்து வெற்றி வாய்ப்பை நெருங்கச் செய்தார்.

தென்னாபிரிக்கா 276 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது எய்டன் மக்ரம் 136 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அப்போது தென்னாபிரிக்கா வெற்றிபெற மேலும் 6 ஓட்டங்கள் மாத்திரமே தேவையாக இருந்ததுடன் கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன.

அப்படியிருந்தும் தென்னாபிரிக்க அணியினரின் முகத்தில் ஏதோவொரு அச்சமும் கவலையும் குடிகொண்டிருந்ததை காணமுடிந்தது.

ஆம். அந்த அளவுக்கு கடந்த காலத்தில் பல கசப்பான தோல்விகளை தென்னாபிரிக்கா சந்தித்துள்ளது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் உட்பட ICC 12 அரைஇறுதிகளிலும், ஒரு இறுதிப் போட்டியிலும் தோல்வியடைந்த கசப்பான வரலாறு தென்னாபிரிக்காவுக்கு உள்ளது.

சர்வதேச உலகக் கிண்ணத் தொடரில் 1992, 1999, 2007, 2015, 2023 அரைஇறுதிகளிலும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் 2000, 2002, 2006, 2013, 2025 அரைஇறுதிகளிலும் T20 உலகக் கிண்ணத் தொடர்களில் 2009, 2014 அரைஇறுதிகளிலும் 2024 இறுதிப் போட்டியிலும் தென்னாபிரிக்கா தோல்வியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தமுறை தென்னாபிரிக்கர்களின் கனவை நனவாக்கிய தலைவராக டெம்பா பவுமா பதிவானதுடன் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.

இது 27 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்கா வெற்றிகொண்ட சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வெற்றிக்கிண்ணமாகும்.

இதற்கு முன்பு மறைந்த அணித்தலைவர் ஹென்சி குரெஞ்சே தலைமையில் 1998 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா வென்ற மினி உலகக் கிண்ணமே இதுவரைக் காலமும் அவர்கள் பெற்ற ஐ.சி.சியின் மாபெரும் வெற்றியாகும்.