அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் விளக்கமறியலில்

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 13-06-2025 | 6:48 PM

கைது செய்யப்பட்டுள்ள அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்காக அவர் இன்று(13) மீண்டும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அனுராதபுரம் மேல்நீதிமன்றத்திற்கு மோசடியான ஆவணத்தை சமர்ப்பித்து பிரதிவாதியொருவரை விடுவித்தமை தொடர்பில் அவர் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இன்று(13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் பிரதம நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரிய உத்தரவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 28 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அவர்கள் சிறைச்சாலைகளில் கைதிகள் விடுவிக்கப்பட்டமை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளனர்.