.webp)
Colombo (News 1st) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் உலக வங்கி குழுமத்தலைவர் அஜய் பங்கா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
விவசாயம் மற்றும் அதன் முக்கிய துறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் உலக வங்கி குழுமத்தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தாக்கம் மற்றும் உற்பத்தித்திறனுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியப்பாடுகள் குறித்து இலங்கை ஆராய்வதை அவர் ஊக்குவித்ததாக பிரதமர் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் தொழில்துறைகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதாரக் கொள்கையை வலுப்படுத்தவும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை விரிவுபடுத்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் உழைப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியின் போது உலக வங்கி வழங்கிய ஆதரவிற்காக உலக வங்கிக் குழுமத்தலைவருக்கு பிரதமர் தனது நன்றியையும் இதன்போது தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(07) நாட்டை வந்தடைந்தார்.
இலங்கையின் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தனியார் பிரிவின் அபிவிருத்தி என்பவற்றை இலக்காகக் கொண்டு அவரது விஜயம் அமைந்துள்ளது.