சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது

by Bella Dalima 08-12-2023 | 5:24 PM

Colombo (News 1st) உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

முன்மொழியப்பட்ட ஆணைக்குழு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை பிரஜைகளின் முறைப்பாடுகள் தொடர்பில் உண்மையை உறுதி செய்யும் வகையில் நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் நிலையான அமைதிக்கு தேவையான வசதிகளை வழங்குவதே இதன் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு, சமாதானம், சட்டத்தின் ஆட்சி, சகவாழ்வு, சமத்துவம், சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் வலுப்படுத்தவும் இந்த ஆணைக்குழு செயற்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு  உட்பட இலங்கையின் யுத்தத்திற்கு பின்னராக நல்லிணக்க முயற்சிகளில் கடந்த பல ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளை மீளாய்வு செய்யவும், பரிசீலிக்கவும் நடைமுறைப்படுத்தவும் இந்த ஆணைக்குழு செயற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தினால் 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான ஆலோசனை செயலணியின் ஆய்வுகள் தொடர்பிலும் இந்த ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தேச சுயாதீன ஆணைக்குழு எந்தவித அரசியல் தலையீடு இன்றியும் பக்கசார்பற்றதாகவும் செயற்படுவதை உறுதிப்படுத்துவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தேச புதிய சட்டம் அமுலுக்கு வரும் வரை, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.