.webp)
Colombo (News 1st) நாட்டின் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.
வருடத்தின் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.
இதனால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்வேறு பிரச்சினைகளால் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்திய உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்து, சிகிச்சை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த விசேட குழுவில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வட மாகாணத்திலும் புத்தளம், நுவரெலியா மாவட்டங்களிலும் வைத்தியர்கள் இன்மையால் வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வைத்தியர்கள் வௌிநாடு செல்கின்றமை, ஓய்வு பெறுகின்றமை, இடமாற்றம் பெறுகின்றமை, சேவையை விட்டு விலகுகின்றமை உள்ளிட்ட காரணங்களால் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வருடத்தின் கடந்த 10 மாதங்களில் 300 விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.