பல எரிபொருள் நிலையங்கள் முற்பதிவு செய்யவில்லை

குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பேணுவதற்கான முற்பதிவுகளை பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மேற்கொள்ளவில்லை: கஞ்சன விஜேசேகர

by Bella Dalima 03-06-2023 | 7:02 PM

Colombo (News 1st) மே 27 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாட்களில் 121 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எந்தவொரு முற்பதிவையும் மேற்கொள்ளவில்லையென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பேணுவதற்கான முற்பதிவுகளை அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மேற்கொள்ளவில்லை என்பதையே ஆரம்பக்கட்ட ஆய்வுகள் வௌிக்காட்டுவதாக ட்விட்டர் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிரப்பு நிலையங்களில் குறைந்தபட்சம் 50% எரிபொருள் கையிருப்பு இருக்க வேண்டுமென்பது கட்டாயமானதாகும்.

இந்த நிலையில், அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமங்கள் ஆய்வுகளின் பின்னர் இரத்து செய்யப்படுமென எரிசக்தி அமைச்சரின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பெட்ரோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை அண்மித்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார். 

இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென அவர் உறுதியளித்தார். 

இதனிடையே, இன்றும், நாளையும் விடுமுறை தினங்களாக இருக்கின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிந்தது.