ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் கொலை

ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கழுத்து நெரித்துக் கொலை

by Bella Dalima 04-03-2023 | 5:14 PM

Russia: ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை (Sputnik V) கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான Andrey Botikov, அவரது குடியிருப்பில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் இடுப்புப் பட்டியால் (Belt) கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதாகும் Botikov, கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் சூழலியல் மற்றும் கணிதவியல் துறையின் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். 

அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் வியாழக்கிழமை அவரது உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காலத்தில் 2020ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டிற்காக Sputnik V என்ற கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்த 18 விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர்.

முதற்கட்ட விசாரணையில், 29 வயது இளைஞர், Botikov-உடன் நடந்த வாக்குவாதத்தின் போது, இடுப்புப் பட்டியால் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர் மீது மிக மோசமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.