ஊடகவியலாளர் நிபோஜனின் பூதவுடல் நல்லடக்கம்

by Staff Writer 01-02-2023 | 12:14 PM

Colombo (News 1st) விபத்தில் சிக்கி அகால மரணமடைந்த நியூஸ்பெஸ்ட்டின் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய செய்தியாளர் நிற்சிங்கம் நிபோஜனின் இறுதிக் கிரியைகள் இன்று(01) இடம்பெற்றன. 

கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.

அன்னாரின் பூதவுடலுக்கு  ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் தமது இறுதி அஞ்சலி செலுத்தினர். 

நியூஸ்பெஸ்ட்டின் கிளிநொச்சி பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய நிற்சிங்கம் நிபோஜன், கிளிநொச்சி மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் நியூஸ்பெஸ்ட்டுடன் இணைந்து சேவையாற்றியிருந்துடன் இறுதிவரை ஊடகத் துறைக்காக கடமையாற்றியிருந்தார். 

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை அறிக்கையிடுதலினூடாக பன்னெடுங்காலமாக தீர்க்கப்படாத அவர்களின் பிரச்சினைகள் தீரும் என்ற வேட்கையுடன் செயலாற்றிய ஊடகவியலாளரில் நிற்சிங்கம் நிபோஜனும் ஒருவராவார். 

சிறந்த புகைப்படக்கலைஞராக அறியப்படும் நிற்சிங்கம் நிபோஜன், பாடசாலை காலத்தில் சாரணர் இயக்கத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளார். 

ஒரு பிள்ளையின் தந்தையான நிற்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலிலிருந்து வீழ்ந்து நேற்று முன்தினம்(30) மாலை உயிரிழந்தார்.