அரசியல் கைதி ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை

by Staff Writer 26-01-2023 | 2:09 PM

Colombo (News 1st) பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியொருவர் 12 வருடங்களின் பின்னர், மன்னார் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2011 ஜூன் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 44 வயதான சிவசுப்ரமணியம் தில்லைராஜ் என்பவரே இன்று(26) விடுவிக்கப்பட்டுள்ளார்.

1998ஆம் ஆண்டு லயன் எயார் விமானத்தை இரணைதீவிலிருந்து தாக்கியமை அல்லது அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் குறித்த விமானத்தில் பயணித்த 7 வௌிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட 56 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கு இன்று(26) மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி M.M.M.நிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுவித்து விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த அவர் இதுவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.