ஐ.தே.க-வின் கொள்கைள் 100% ஒத்துப்போகவில்லை

ஐ.தே.க-வின் கொள்கைள் 100% ஒத்துப்போகவில்லை; ஜனநாயகத்தை பாதுகாக்கவே இணைந்தோம் - பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் கருத்து

by Bella Dalima 10-01-2023 | 8:24 PM

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இன்று கைகோர்த்தன. 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளன. 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்கு வைத்து புதிய கூட்டமைப்பை உருவாக்குதல், பொது சின்னத்தின் கீழ் போட்டியிடுதல் உள்ளிட்ட பொதுவான விடயங்களை முன்னிறுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் தெரிவு செய்யப்பட்ட 5  மாவட்டங்களின் அமைப்பாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். 

இதனிடையே, தேர்தலில் தலையிடப்போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, கூட்டணிக்கான சந்திப்புகளை ஜனாதிபதி செயலகத்தில் எவ்வாறு நடத்துவார் என போராட்டக்கள சட்டத்தரணிகள் அமைப்பு இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியது. 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினரின் கொள்கைகள் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் நூறுக்கு நூறு வீதம் ஒத்துப்போகவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்
 
எனினும், இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தொடர்பிலேயே தாம் கட்சி என்ற ரீதியில் தீர்மானத்தை மேற்கொண்டதாக சாகர காரியவசம் கூறினார். 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்துகின்ற போது அவர் இதனை தெரிவித்தார். 

இதனிடையே, அனுராதபுரம் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள்  19-க்கான  கட்டுப்பணத்தை ஶ்ரீலங்கா பொதுஜன  பெரமுன இன்று  செலுத்தியது. 

திருகோணமலை மாவட்டத்திற்கான 13  உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை திருகோணமலை உதவி தேர்தல் காரியாலயத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன செலுத்தியது.