தப்பிச்சென்ற கைதி கண்டுபிடிப்பு; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழப்பு

by Bella Dalima 12-11-2022 | 3:57 PM

Colombo (News 1st)  கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி ஒருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி ஒருவர் வெலிகந்த - சிங்கபுர வனப்பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டார். 

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே கைதி கண்டுபிடிக்கப்பட்டார். 

எனினும், உணவின்றி சுகவீனமுற்றிருந்த குறித்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

31 வயதான மொஹான் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கடந்த 6 ஆம் திகதி  ஏற்பட்ட அமைதியின்மையின் போது கைதிகள் சிலர் தப்பிச் சென்றிருந்தனர். 

பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச்சென்ற 10 பேரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மோதலில் காயமடைந்த ஐந்து கைதிகள் தொடர்ந்தும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.