சூகியின் சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீடிப்பு

ஆங் சான் சூகியின் சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீடிப்பு

by Bella Dalima 12-10-2022 | 4:23 PM

Myanmar: மியன்மாரில் தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சூ கிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. 

மியன்மாரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. 

கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 

எனினும், அந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகக் கூறி கடந்த வருடம் பெப்ரவரியில் இராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது இராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என பல வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை மியன்மார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை அதிகரித்தது. 

தற்போது தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர் மீது மேலும் பல வழக்குகள் உள்ளன. 

சூகி மீதான வேறு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.  இதன் மூலம், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.