.webp)
California; இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 8 மாதக் குழந்தை, அவரது பெற்றோர் உட்பட நான்கு பேர் அமரிக்காவின் கலிஃபோர்னியாவில் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்று பொலிஸார் தேடி வந்த நிலையில், மறுநாள் அவர்கள் கடத்தப்பட்ட பகுதிக்கு அருகே நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடத்தி கொலை செய்யப்பட்ட இந்தியர்களில் ஒருவரின் ATM-ஐ பயன்படுத்தி குற்றவாளி பணம் எடுத்தது தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நால்வரும் திங்கட்கிழமை கடத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மெர்சிட் கௌண்டியில் அட்வடர் என்ற இடத்தில் இருந்த ATM-இல், நான்கு பேரில் ஒருவரின் அட்டையில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு பதிவான CCTV கெமராவை பரிசோதனை செய்ததில், கடத்தப்பட்ட இடத்தில் பதிவான காட்சிகளில் ஒருவரின் தோற்றத்துடன் அது மிக சரியாக ஒத்துப்போனதைத் தொடர்ந்த அந்தப் புகைப்படத்தை பொலிஸார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
இதற்கிடையே, கொலையுண்ட நால்வரும் பயன்படுத்திய கார், திங்கட்கிழமை இரவு ஓரிடத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
8 மாத பெண் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கௌர் (27), ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கலிஃபோர்னியாவின் மெர்சிட் கௌண்டியில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து கடத்தப்பட்டனர்.
அவர்கள் கடத்தப்பட்ட இடத்தில் பதிவான CCTV காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில், ஜஸ்தீப் மற்றும் அமன்தீப் ஆகியோர் கைகள் கட்டப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்படுகிறார்கள். சில நிமிடங்கள் கழித்து, குழந்தையுடன் அவரது தாயும் வெளியே அழைத்து வரப்பட்டு, ஒரு ட்ரக்கில் ஏற்றப்படுகிறார்கள்.
CCTV காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை அடையாளம் கண்ட பொலிஸார், 48 வயதாகும் ஜீசஸ் மேனுவல் சல்காடோவைக் கைது செய்ய முயன்ற போது, அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததால், ஆபத்தான நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.