X-Press Pearl கப்பல் தொடர்பான அறிவித்தல்

X-Press Pearl கப்பலின் இழப்பீடு தொடர்பில் பரீசிலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை

by Staff Writer 18-09-2022 | 2:50 PM

Colombo (News 1st) நாட்டின் கடல் எல்லையில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் பரிசீலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

X-Press Pearl கப்பலின் சேதங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இதனை தெரிவிப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன தெரிவித்தார்.

இது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், X-Press Pearl கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கை குறித்து முழுமையான விசாரணை நடத்த எதிர்பார்ப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

X-Press Pearl கப்பல் இலங்கைக் கடலில் மூழ்கி ஒரு வருடமும் 3 மாதங்களுக்கும் மேலாகிறது.

குறித்த கப்பலில் ஆபத்து மிக்க பொருட்கள் அடங்கிய 81 கொள்கலன்கள் காணப்பட்டதுடன், 25 தொன் நைட்ரிக் அமிலமும் அடங்கியிருந்தது.

கப்பல் தீப்பற்றியதன் காரணமாக மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த கரையோரப் பகுதி வரையில் சுமார் 746 கிலோ மீட்டர் தூரம் வரை பாதிக்கப்பட்டது.