.webp)
Colombo (News 1st) நாவலப்பிட்டி - கெட்டபுலா பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கம்பளை - மொரகொல்ல பகுதியில் மகாவலி ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெட்டபுலா தோட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை உறவினர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கம்பளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி - புதுக்காட்டிலிருந்து அக்கரவத்தை பகுதியை ஊடறுத்து செல்லும் மகாவலி ஆற்றின் கிளை ஆற்றை கடப்பதற்காக முற்பட்ட மூவர் கடந்த இரண்டாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தமையால் பாலத்தை மேவி 3 அடிவரை நீர்மட்டம் காணப்பட்டதை அடுத்து கயிற்றின் உதவியுடன் 8 பேர் பாலத்தை கடக்க முயற்சித்தனர்.
அதிகரித்த நீர் பிரவாகத்தினால் மூன்று பேர் ஆற்று நீரில் அள்ளுண்டு சென்றனர்.
அக்கரவத்தை பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 45 வயதான ஜெயராம் ஜெயலட்சுமி, 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதான சத்தியசீலன், 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதான சந்திரமோகன் சுரேஷ் ஆகியோரே நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இவர்களில் 45 வயதான ஜெயராம் ஜெயலட்சுமியின் சடலம் நேற்று(14) மாலை கம்பளை மொரகொல்ல பகுதியில் மீட்கப்பட்டது.
இதனிடையே, 49 வயதான சத்தியசீலனின் சடலம் கடந்த 11ஆம் திகதி கம்பளை மொரகொல்ல பகுதியிலேயே மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட 35 வயதான சந்திரமோகன் சுரேஷ் என்பவர் தொடர்ந்தும் தேடப்படுவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.