.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக வீட்டிற்கு தீ வைத்து, சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைதான நால்வர், அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் தொடர்பில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றதையடுத்து, இன்று பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்தினால் வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பீட்டர் அன்ரூ இவோன் பெரேரா என்பவரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணைகள் நடைபெறுவதாகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேலும் கூறியுள்ளனர்.