சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா நல்லடக்கம்

by Staff Writer 30-05-2022 | 10:33 PM
Colombo (News 1st) பண்டாரகம - அட்டலுகமவில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் ஜனாஸா இன்று(30) நல்லடக்கம் செய்யப்பட்டது. அட்டலுகம பெரிய பள்ளிவாசல் பொது மையவாடியில் சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்போது அதிகளவிலானவர்கள் அங்கு கூடியிருந்தனர். இதனிடையே, சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 29 வயதான ஒருவராவார். சந்தேகநபர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவரென பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று(30) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை 2 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, சந்தேகநபர் தற்போது பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.