பசளை நிறுவனங்களுக்கு 28,000 மில்லியன் ரூபா நிலுவை

பசளை நிறுவனங்களுக்கு 28,000 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு

by Staff Writer 25-05-2022 | 4:21 PM
Colombo (News 1st) சேதன மற்றும் அசேதன பசளை நிறுவனங்களுக்கு 28,000 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. சேதன பசளை உற்பத்தியாளர்களை நேற்று (24) வரவழைத்து, அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை 5000 மில்லியன் ரூபாவென இதன்போது தெரியவந்துள்ளது. அதில் 500 மில்லியன் ரூபா நிதியை திரைசேறியுடன் கலந்துரையாடி நேற்றைய தினமே பெற்றுக்கொடுத்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். எஞ்சியுள்ள நிலுவைத்தொகையையும் விரைவில் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மிகவும் உயர் திறன்கொண்ட சேதன பசளை மாத்திரமே விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்தார். உயர் திறனுடன் சேதன பசளையை உற்பத்தி செய்யாத நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதனிடையே, 2019 ஆம் ஆண்டு முதல் 23,000 மில்லியன் ரூபா நிலுவை பணத்தை அசேதன பசளை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.