விநியோக நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தால் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது 

by Staff Writer 21-05-2022 | 4:56 PM
Colombo (News 1st) வீதிகளை மறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் விநியோக நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின், அந்த நிலையத்திற்கு எரிபொருள் விநியோகிக்காதிருக்க கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்வரும் 10 நாட்களுக்குள் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் பெட்ரோல் கப்பல்களும் வருகை தரவுள்ளன. அதில் 92, 95 ரக பெட்ரோல் உள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி சந்தைகளுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும். எரிபொருள் இல்லாத காரணத்தினால், வீதிகளை மறித்து நிரப்பு நிலையங்களின் ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படும் வகையில் மக்கள் செயற்படுவார்களாயின், இந்த நடைமுறைகள் யாவும் சீர்குலையும். இதனால் நாம் கொள்கை ரீதியிலான தீர்மானமொன்றை எடுத்துள்ளோம். ஏதேனுமொரு இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலைத்தை மூடி, அல்லது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பாட்டால், அந்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது.