நீர்கொழும்பில் இனவாதத்தை தூண்டும் முயற்சி மக்களால் முறியடிப்பு

by Staff Writer 11-05-2022 | 8:29 PM
Colombo (News 1st) இனவாத உணர்வினைத் தூண்டி, மக்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்கும் சூழ்ச்சி இடம்பெறுவதாக நீர்கொழும்பு மக்கள் குற்றம் சாட்டினர். நீர்கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர். சிலரால் தீ வைக்கப்பட்ட நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் வளாகத்திற்கு அருகில் நேற்றிரவு மோதல் சம்பவம் பதிவானது. குறித்த தரப்பினர் ஹோட்டல், வாகனங்கள், சில வர்த்தக நிலையங்களுக்கு சேதம் விளைவித்திருந்தனர். அவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் சமயத் தலைவர்கள் உடனடியாக தலையீடு செய்ததுடன், வெளியிலிருந்து வருகை தந்த குழுவொன்று மோதலை வலுப்படுத்த முயற்சித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். அவர்கள் இனவாதத்தை தூண்ட முயற்சித்ததாகவும், தமது மக்கள் மத்தியில் இனவாதம் இல்லை எனவும் அவர்கள் கூறினர். நேற்றிரவு இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர். அதனையடுத்து, அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.