இலங்கையை சேர்ந்த 18 பேர் தமிழகத்தில் தஞ்சம் 

by Bella Dalima 22-04-2022 | 4:58 PM
Colombo (News 1st) இலங்கையை சேர்ந்த 18 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மன்னாரை சேர்ந்த 13 பேர் இரண்டு படகுகளில் நேற்று (21) தனுஷ்கோடியை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்களே தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளதுடன், இவர்களிடம் Q-பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு இவர்கள் அனைவரும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, யாழ்ப்பாணம் - நீர்வேலியை சேர்ந்த மேலும் 5 பேரும் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். அதற்கமைய, நேற்று மாத்திரம் 18 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை 60 இலங்கையர்கள் தமிழகத்திற்கு சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.