TELO அமைப்பின் அறிக்கை

அரசின் உள்ளக பொறிமுறைக்குள் தமிழர் பிரச்சினைகளை சிக்கவைக்க கூடாது - TELO

by Staff Writer 28-03-2022 | 7:22 PM
Colombo (News 1st) அரசின் உள்ளக பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிக்கவைக்கக் கூடாதென டெலோ(TELO) எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போகவைக்கும் அரசின் நகர்விற்கு இடமளிக்க முடியாதென டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் டெலோ வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். நல்லிணக்க கோரிக்கைகளை கையாள்வதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு எதிர்கொண்டிருக்கும் சர்வதேச விசாரணை மற்றும் நீதி பொறிமுறையை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாக சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளமை ஆபத்தானவை என டெலோ அமைப்பின் அறிக்கையினூடாக சுரேந்திரன் குருசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதைப் போல கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் தற்போது ஐ.நாவில் முன்னெடுக்கப்படும் நீதி பொறிமுறையை தவிடுபொடியாக்க இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரச தரப்பில் விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவிப்பது சர்வதேச விசாரணையை நீர்த்துப்போக வைக்கும் செயல் என டெலோ அமைப்பு தனது அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கம் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய சர்வதேச மற்றும் உள்ளக நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காக பேரினவாத அரசுகள் தமிழ் மக்களை பயன்படுத்தி வந்த வரலாறுகளையும் கருத்திற்கொண்டு கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், சந்தர்ப்பங்களை சரியான முறையில் பக்குவமாக தமிழ் மக்கள் சார்ந்ததாக கையாள வேண்டும் என்பதே டெலோ அமைப்பின் நிலைப்பாடு என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.