ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றும் விதிமுறைகள்

ஏற்றுமதி வருமானத்தை ரூபாவிற்கு மாற்றும் விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு

by Staff Writer 08-01-2022 | 6:33 PM
Colombo (News 1st) ஏற்றுமதி வருமானத்தை ரூபாவிற்கு மாற்றுவது தொடர்பில் சமீபத்தில் வௌியிடப்பட்ட விதிமுறைகள் சில தரப்பினரால் தனிப்பட்ட நலன்களுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் உரிமம் பெற்ற வங்கிகளால் வலுக்கட்டாயமாக ரூபாவிற்கு மாற்றப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது. ஏற்றுமதி வருமானத்தை ரூபாவிற்கு மாற்றுவது தொடர்பிலான விதிமுறைகள் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு பொருந்தாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே, வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தை ரூபாவிற்கு மாற்றுவது அத்தியாவசியமற்றதென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகளூடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை 10 ரூபா மேலதிகமாக பெற்றுக்கொடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.